Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜோதிடர் சொன்ன வார்த்தை - மகனை எரித்து கொன்ற கொடூர தந்தை

மார்ச் 03, 2021 11:53

திருவாரூர்: மூட நம்பிக்கையால் பெற்ற மகனையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்திருக்கிறார் ஒரு கொடூர தந்தை. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளனது. மகனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகனை கொலை செய்த நபரின் பெயர் ராம்கி. 29 வயதாகும் இவர் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராமையன் என்பவரின் மகனாவார்.

ராம்கிக்கும் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது. ஆட்டோ ஓட்டி வரும் ராம்கிக்கு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு. இதற்காக ஜோதிடம், பரிகாரம் என்று யார் யாரையோ பார்த்தார்.

ஜோதிடரின் பேச்சை முழுவதுமாக நம்பிய ராம்கி, தனது மகன் சாய் சரணை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கப் போவதாக மனைவி காயத்ரியிடம் தெரிவித்துள்ளார். இதனை காயத்ரி ஏற்றுக்கொள்ளவில்லை. தினசரியும் விவாதமும் சண்டையும் ஏற்படவே விபரீத முடிவை எடுத்தார் ராம்கி. கடந்த வாரமும் இது குறித்து வீட்டில் சண்டை நடந்துள்ளது. சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை மனைவி கேட்காமல் போகவே, அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சிறுவன் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் சிறுவன் சாய்சரண் கொழுந்துவிட்டு எரிந்தார்.கண் முன்னே மகன் எரிவதைப் பார்த்த காயத்ரி கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாய்சரண் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மருத்துவர்கள் உயிரைக்காப்பாற்ற போராடியும் பலனில்லை இன்று அவனது மரணச் செய்தியைத்தான் காயத்ரிக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்

நன்னிலம் காவல்துறையினர் சிறுவனை எரித்து கொன்ற கொடூரன் ராம்கியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக ராம்கி வாக்குமூலம் கொடுக்கவே காவல்துறையினர் அதிர்ந்து போயினர். 

ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் மன்னார்குடி கிளை சிறையில் அடைத்துள்ளனர். பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையினாலும் மூட நம்பிக்கையாலும் பெற்ற மகனையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்